திருக்குறள்

இயற்றியவர்: திருவள்ளுவர்


Quick Introduction to Thirukkural in Tamil, English. Written by Thiruvalluvar.

திருக்குறள் (Thirukkural)  உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது

திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள்.

தமிழ் உரை எழுதியவர்கள்
• திரு பரிமேலழகர்
• திரு மு.வரதராசனார்
• திரு மணக்குடவர்
• திரு மு.கருணாநிதி
• திரு சாலமன் பாப்பையா
• திரு வீ.முனிசாமி
• திரு வ.சுப.மாணிக்கம்
• திரு முல்லை பி.எல்.முத்தையா

ஆங்கில உரை எழுதியவர்கள்
• Rev. Dr. G. U. Pope
• Rev W. H. Drew
• Rev. John Lazarus
• Mr F. W. Ellis



"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"


உங்கள் கருத்து

திருக்குறள் இணைய தளத்தை பார்வையிட்டமைக்கு நன்றி.

பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 18,000-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை (https://www.sirukathaigal.com/) வாயிலாக படித்து மகிழுங்கள்.

உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.

உங்கள் கருத்துகளை என்றும் வரவேற்கிறோம். நன்றி.

பரிமேலழகரின்றி வள்ளுவம் இல்லை

இந்திரா பார்த்தசாரதி (http://www.uyirmmai.com)

‘காலம்' என்ற கருத்துக் குறித்து, ஸ்டீஃபன் ஹாக்கிங் என்ற தலைசிறந்த விஞ்ஞானி ‘காலத்தின் சுருக்கமான வரலாறு' என்ற நூல் எழுதியுள்ளார். 'கால'த்தைப் பற்றிய விஞ்ஞானப் பூர்வமான பல கோட்பாடுகளை விதம் விதமான பரிமாணங்களில் ஆராய்கிறார்.

இதைப் படிக்கும் போது எனக்குக் குறள் நினைவுக்கு வந்தது.

‘நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்.'

இதற்குப் பரிமேலழகர் எழுதியுள்ள உரையை உடன் வைத்துப் படித்தல் அவசியம். ஏனெனில், குறளுக்கு நிகரான பொருட்செறிவு உடையது அவர் உரை.

சரி, இக்குறளின் பொருள் என்ன? அதை முதலில் பார்ப்போம். இக்குறள் ‘நிலையாமை' என்ற அதிகாரத்தில் வருகிறது. ஒரு பெரிய வாள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அது கண்ணுக்குத் தெரியவில்லை. அது மிகவும் கூர்மையான வாள். உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் அந்த வாளின் கண் தொடர்ந்து வெட்டப்பட்டுக் கொண்டே வருகிறது..அறுபடுவதும் நம் கண்ணுக்குத் தெரியவில்லை. ஒருநாள் உயிர் இல்லாமல்போகும்போதுதான், கண்ணுக்குத் தெரியாத வாளில், உடம்பு தொடர்ந்து அறுபட்டுக் கொண்டு வந்திருக்கிறது என்பது நமக்குத் தெரிகிறது.

இந்த வாளின் பெயர் என்ன? ‘காலம்' என்கிறார் வள்ளுவர். காலம் அருவப் பொருள். உலகக் காரியங்கள் நடைபெறுவதற்காக ‘காலத்தை' நாம், ‘நாள்' என்றும் ‘இரவு' என்றும் கூறு போட்டுக் கணக்கிடுகிறோம். இவ்வாறு கூறு போட உதவுவது, சூரியனின் உதயம், சூரியனின் அஸ்தமனம் போன்ற கண்ணுக் தெரியும் நிகழ்வுகள். ‘காலம்' என்ற அருவமான 'வாள்', 'நாள்' என்ற மயக்கத்தை நமக்குத் தோற்றுவிக்கின்றது. அவ் ‘வாளில்' அறுபட்டுக் கொண்டிருக்கின்றோம் என்று உணராமல், பொழுது அவ்வளவில் இன்பமாகக் கழிகின்றது என்று மகிழ்பவர் பலர். இவ்வாறு அறுபடுவதை உணர்பவர் மிக அரியவர்களாகத்தாம் இருக்கின்றார்கள்.

பரிமேலழகர் உரையைப் பார்ப்போம்: "நாளெ'ன்று அறுக்கப்படுவதொரு கால வரையறையைப் போல் தன்னைக் காட்டி, ஈர்ந்து செல்கின்ற வாளின் வாயது உயிர், அஃது உணர்வாரைப் பெறின். ‘காலமென்னும் அருவப் பொருள் உலகியல் நடத்தற் பொருட்டு ஆதித்தன் முதலிய அளவைகளால் கூறுபட்டதாக வழங்கப்படுதல்லது, தானாகக் கூறுபடாமையின், ‘நாளென்று ஒன்று போல்' என்றும், அதுதன்னை வாளென்று உணரமாட்டார் நமக்குப் பொழுது போக நின்றதென்று இன்புறுமாறு ‘நாளாய்' மயக்கலிற் ‘காட்டி' யென்றும், இடைவிடாதி ஈர்தலின் வாளின் வாயதென்றும், அது ஈர்கின்றமையை உணர்வார்


அரியராகலின், ‘உணர்வார்ப் பெறின்' என்று கூறினார்.'உயிர்' என்ற சாதி ஒருமைப் பெயர் ஈண்டு உடம்பின்மேல் நின்றது. ‘ஈரப்' படுவது அதுவே யாகலின், ‘வாள்' என்பது ஆகுபெயர்.”

பரிமேலழகர் இன்று அரசியல் காரணங்களினால், பலத்த விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். ஆனால், பரிமேலழகர் உரை இல்லாமலிருந்தால், இக்குறளைப் புரிந்து கொண்டிருக்கமுடியுமா என்று யோசிக்க வேண்டும். பகவத் கீதையைப் போல், திருக்குறளும் எல்லா தலைகளுக்கும் பொருந்துகின்ற குல்லாய். அதனால்தான், அவரவர்கள் தங்கள் அரசியல் கொள்கைகளுக்கேற்ப, குறளுக்கு உரை கண்டு, இன்று, பரிமேலழகரைத் தூற்றுகிறார்கள்.

குறளை நுனிப்புல் மேய்கின்ற உரைகாரர்கள், ‘ நாள் என்பது நம் வாழ்நாளை அறுக்கிற வாள்' என்பார்கள். மணக்குடவர் கூறும் உரையும் இதுதான். பரிமேலழகர் இதை மறுக்கிறார்.'காலம்' என்பதுதான் ‘நாளெ' ன ஒன்று போல், கண்ணுக்குப் புலனாகாத வாள், அதன்கண் அறுபடுவது உயிருடைய உடம்பு என்கிறார் அவர். ‘நாளென' என்ற சொல்லாட்சியில், 'என'என்பது, பெயர் அன்று, இடைச்சொல் என்கிறார் பரிமேலழகர். அதாவது, 'நாளென்பது' என்று, ‘என'வைப் பெயராகக் கொண்டு, ‘நாளென்பது' என்று பொருள் கொள்ளக்கூடாது, ‘நாளென' என்று, ‘என'வை இடைச் சொல்லாகக் கொள்ள வேண்டுமென்கிறார் பரிமேலழகர். பரிமேலழகர் ஒருவர்தான் வள்ளுவரின் இதயத்தை நன்கு உணர்ந்தவர். அதனால்தான், வள்ளுவரின் சொற்சிக்கனத்தைக் கையாண்டு, ஆழமான உரையை அவரால் எழுத முடிந்திருக்கிறது.

‘உணர்வார்ப் பெறின்' என்பதற்கு அவர் மிக நுணுக்கமாகப் பொருள் உரைக்கிறார். நிகழும் கணமே சொர்க்கம், அதை அனுபவிப்பதைவிட்டு வரும் கணத்தைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும் என்று ஆங்கிலத்தில் கூறுவது போல,'epicurean' கோட்பாட்டைத் தேர்ந்தெடுத்து வாழ்பவர்கள் பலர். ஆனால், வாழ்க்கையின் அருமையை உணர்ந்து அது மற்றவர்க்குப் பயன்பட வாழ்கிறார்கள். ‘பெறின்' என்பது அவ்வாறு வாழ்கின்றவர்கள், ‘அரியராதலின்' என்கிறார் பரிமேலழகர்.

‘காலம்' என்பது நாமே நம்முடைய சௌகரியத்துக்காக உண்டாக்கிக்கொண்ட ஒரு தவிர்க்க முடியாத மானசீக ஏற்பாடு என்கிறது இன்றைய விஞ்ஞானம். “வெளி' (space)யுடன் சேர்ந்து இது நான்காவது பரிமாணம்( fourth dimension) ஆகின்றது" என்றார் ஐன்ஸ்டீன். பரிமேலழகர் கூற்று, ‘காலம்' என்ற மானசீகத்தை எவ்வளவு துல்லியமாகப் புலப்படுத்துகின்றது பாருங்கள்!

‘'நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு'

‘நேற்றிருந்தான், இன்று அவன் இல்லை என்று சொல்லும் நிலையாமையை மிகுதியாக உடையது இவ்வுலகம்' என்பது இதன் பொருள்.

வாழ்க்கையின் மீது ஓர் எதிர் மறை உணர்வை ஏற்படுத்துவதற்காக வள்ளுவர் இக்குறளை எழுதவில்லை. ஆனால் ‘நிலையாமை'யை உணர்ந்து, மனிதன் ஆக்கப்பூர்வமாகச் செயல் படவேண்டும் என்பதைக் கூறத்தான் வள்ளுவர் இக்குறளை எழுதியுள்ளார். ‘ஈண்டு உண்மை ( ‘உளனொருவன்') பிறத்தலையும், இன்மை, (‘இன்றில்லை') இறத்தலையும் உணர்த்தி நின்றன என்கிறார் பரிமேலழகர்.

‘பிறப்பு எதேச்சை, இறப்பு உறுதி' என்பார்கள், இருத்தலிய வாதிகள்.(Existentialists). இதனால், வாழும் காலத்துக்குள், நம் ஆற்றலின் எல்லையை முழுதுறும் உணர்வதற்கு நாம் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.ஏன்?

‘வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு'

‘நின்ற நீரின் அளவினவாம் தாளினது நீளங்கள்; அதுபோல் மக்கள்தம் ஊக்கத்தின் அளவினவாம் அவர் உயர்ச்சி', என்கிறார் பரிமேலழகர்.

‘உள்ளம்' என்றால் இங்கு ஊக்கத்தை அல்லது முயற்சியைக் குறிக்கின்றது. இதைத்தான் ‘நம் ஆற்றலின் எல்லையை உணர்வதற்கு நாம் வாழ்க்கையில் மேற்கொள்ளவேண்டிய அகப் பயணம்' என்கிறார்கள் இருத்திலிய வாதிகள். பொருள் படைப்பதற்கு இவ்வாற்றல் பயன்பட வேண்டும் என்று ஒரு நடைமுறைத் தத்துவத்தை எடுத்துக் கூறுகிறார் பரிமேலழகர். ‘உயர்தல், பொருள் படைத்தலால் மிகுதல்' என்பது அவர் வாக்கு. ஆகவே வாழ்க்கை நிலையாமையை உணர்ந்து, நாம் நடைமுறைச் சிந்தனை எவ்வாறு வேண்டுமென்று, வள்ளுவக் கோட்பாட்டுக் கேற்ப உரை எழுதுகிறார் பரிமேலழகர்.

மற்றொரு குறள்.எல்லோருக்கும் மிக அறிமுகமான குறள்தான்.

‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்'.

பொருள் வெளிப்படை. ‘உழுதுண்டு வாழ்கின்றவர்களே வாழ்கின்றவர்கள் ஆவார்கள்.
மற்றவர்கள் பிறரைத் தொழுது வாழ்கின்றவர்கள் ஆகிறார்கள்'.

பரிமேலழகர் உரையைப் பார்ப்போம். ‘யாவரும் உண்ணும் வகை உழுதலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்கின்றாரே தமக்கு உரியராய் வாழ்கின்றவர்; மற்றையரெலாம் பிறரைத் தொழுது அதனால் தாமும் உண்டு அவரைப் பின்செல்கின்றவர்'.

‘தாமும் உண்டு' என்பதில் ‘உம்'மையைக் கவனித்தீர்களா? அதாவது, மற்றவர்களுக்கு உணவளிப்பதுதான் மாந்தர்க்கு முதல் கடமை. எஞ்சியதை உண்பது மனித தர்மம்.

பரிமேலழகர் மேலும் கூறுகிறார்:' தாமும் மக்கட் பிறப்பினராய் வைத்துப் பிறரைத் தொழுது அவர் சில கொடுப்பத் தம் உயிரோம்பி அவர்பின் செல்பவர் தமக்குரியர் அல்லர் என்பது கருத்து'.

அதாவது, உண்மையான மக்கட் பிறப்பினர் உழுதுண்டு தம் தனிமனிதச் சுதந்திரத்தைப் பேணி வாழ்கின்றவர்கள். மற்றவர்கள், தம் தனிமனிதச் சுதந்திரத்தைப் பேணாமையினால்,. உறுப்பு ஒற்றுமையினால் மக்கட் பிறப்பைச் சார்ந்தவர்கள் என்று கூறலாமேயன்றி, உண்மையான மக்களல்லர்; தமக்குரியரல்லாத அடிமைகள். வள்ளுவர் உறுப்பு ஒற்றுமையை அடிப்படையாக வைத்து, அங்கதமாக எழுதியுள்ள குறள்களும் உண்டு.

‘மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்'

‘இதென்ன ஆச்சர்யம்! கயவர்களும் மனித்தப் பிறவியைப் போல் தோற்றம் அளிக்கின்றார்களே! இரண்டு கண்கள், இரண்டு காதுகள்! இரண்டு கைகள், இரண்டு கால்கள்! இந்தமாதிரியான ஒப்புமையை நாம் வேறெங்கும் பார்த்ததேயில்லை!' நாசூக்கான அங்கதத்தின் உச்சம் இதுதான்! ‘கயமை' என்பது இன்று ‘அயோக்கியர்கள்' என்ற பொருளில் வழங்குகிறது. வள்ளுவர் ‘philistine' என்ற பொருளில் வழங்கியிருக்கலாமென்று தோன்றுகிறது. ‘Philistine' என்பதற்கு அகராதிப் பொருள், ‘a crass prosaic individual guided by material rather than intellectual,spiritual or artistic values'.அடுத்த குறளை நோக்கினால் இக்கருத்து வலியுறும்.

‘நன்றாறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவல மிலர்'
‘கயவர்கள், தமக்கு வேண்டியன என்னவென்று அறிந்து, ஒரு குறுகிய வட்டத்துக்குள் தம் வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றனர் என்பதால், மேலும், மேலும் அறிய விழைகின்றவர்களைக் காட்டிலும் கொடுத்து வைத்தவர்கள். அறிய வேண்டுமென்ற ஆவலுமில்லை, அதனால் மனக் கவலையுமில்லை..'

பரிமேலழகர், ‘கீழோர்' என்று குறிப்பாக உணர்த்துவது இப்பொருளைத்தான். அதாவது, தமக்கு உறுதியனவற்றை அறியமாட்டாதவர்கள் என்ற பொருள். ‘அறியுந்தோறும் அறியாமை கண்டற்றால்' என்கிறார் வள்ளுவர் வேறொரு இடத்தில். அறிய, அறியத்தான், நமக்குத் தெரியா விஷயங்கள் எத்தனை இருக்கின்றன என்ற நம் அறியாமையைப் பற்றிய உணர்வு நமக்கு ஏற்படும். இந்தக் கவலை கயவர்களுக்கு அறவே இல்லை. இதுவே அவர்கள் ‘மகிழ்ச்சி' க்குக் காரணம். பரிமேலழகர் உரையில்லை என்றேல், வள்ளுவம் புரியாது.

திருக்குறள் - ஒரு அறிமுகம்


A Short Introduction to Thirukural: திருக்குறள் - ஒரு அறிமுகம்,
Written by Dr.S.Jayabarathi for Project Madurai


தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.

இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.

இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதுவும் மேற்கொண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும், மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார்.கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். வள்ளுவர் தாம் எழுதிய முப்பால் நூலை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் அச்செய்திகள் வாயிலாக அறிகிறோம்.

திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.

பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சிலநூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.

திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. கிருஸ்துவ சகாப்தத்தின் முன் பகுதியைச் சேர்ந்ததாகப் பலர் கருதுவர்.
பழந்தமிழ் நூல்களில் நான்கு பெரும் பகுப்புக்கள் உள்ளன.

1.எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினென்மேல்கணக்கு
2.பதினென்கீழ்க்கணக்கு
3.ஐம்பெருங்காப்பியங்கள்
4.ஐஞ்சிறு காப்பியங்கள்
ஆகியவை அவை.

அவற்றில் பதினென்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு இந்நூல் விளங்குகின்றது.

"அறம், பொருள், இன்பம்", ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய ஆகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துபாடல்களைத் தன்னுள் அடக்கியது.

இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான்.

குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.

"பாயிரம்" என்னும் பகுதியுடன் முதலில் "அறத்துப்பால்" வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , "கடவுள் வாழ்த்து" என்னும் அதிகாரம். தொடர்ந்து, "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்", ஆகிய அதிகாரங்கள்.

அடுத்துவரும் "இல்லறவியல்" என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது.

அடுத்து வரும் "பொருட்பாலி"ல் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.

கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலி"ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள்.

திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.

"அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு...."

என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,

"ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம்,
கூடி முயங்கப்பெறின்"

என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார்.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.

பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப் படுவது திருக்குறள் முனுசாமியின் உரை.

தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு.

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"

ஊடலுவகை


குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: ஊடலுவகை.

குறள் வரிசை:  1321  1322  1323  1324  1325  1326  1327  1328  1329  1330

குறள் 1321:
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
எந்த தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது.
மு.வரதராசனார் உரை:
அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.
சாலமன் பாப்பையா உரை:
அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்.
பரிமேலழகர் உரை:
[அஃதாவது , அப்பெற்றித்தாய ஊடலால் தமக்குக் கூடல் இன்பம் சிறந்துழி , அச்சிறப்பிற்கு ஏதுவாய அவ்வூடலைத் தலைமகள் உவத்தலும் , தலைமகன் உவத்தலும் ஆம் . அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]

(தலைமகள் காரணமின்றிப் புலக்கின்றமை கேட்ட தோழி, அங்ஙனம் நீ புலக்கின்றது என்னை? என்றாட்கு, அவள் சொல்லியது.) அவர்க்குத் தவறு இல்லையாயினும் - அவர்மாட்டுத் தவறில்லை ஆயினும், அவர் அளிக்குமாறு ஊடுதல் வல்லது - நமக்கு அவர் தலையளி செய்கின்றவாறு அவரோடு ஊடுதலை விளைக்கவற்றாகின்றது. ('அவர்க்கு' என்பது, வேற்றுமை மயக்கம். 'அளவிறந்த இன்பத்தராகலின், யான் எய்தற்பாலதாய இத்தலையளி ஒழிந்தாரும் எய்துவர் எனக் கருதி அது பொறாமையான் ஊடல்நிகழா நின்றது' என்பதாம்.).
மணக்குடவர் உரை:
அவர்மாட்டுத் தவறில்லையானாலும் அவர்செய்யும் அருள் ஊடுதலைச் செய்யவற்று. இது துன்பம் பயப்பதாகிய புலவியைச் செய்கின்றது எற்றுக்கென்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காதலிரிடத்தில் தவறு ஒன்றும் இல்லையென்றாலும் அவர் நம்மீது பேரன்பினை அளிக்கும் தன்மை அவருடன் பிணக்கினை உண்டாக்கிக் கொள்ள வல்லமையுடையதாகின்றது.
Translation:
Although there be no fault in him, the sweetness of his love
Hath power in me a fretful jealousy to move.
Explanation:
Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike.
குறள் 1322:
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
காதலரிடையே மலர்நதுள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம் பெருமையுடையதேயாகும்.
மு.வரதராசனார் உரை:
ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.
சாலமன் பாப்பையா உரை:
ஊடல் காரணமாக என்னிடம் தோன்றும் சிறு துன்பத்தினால் அவர் என்மீது காட்டும் பேரன்பு வாடினாலும் பெருமை பெறும்.
பரிமேலழகர் உரை:
(புலவாக்காலும் அத்தலையளி பெறலாயிருக்க, அஃது இழந்து புலவியான் வருந்துவது என்னை? என்றாட்கு, அவள் சொல்லியது.) ஊடலின் தோன்றும் சிறுதுனி - ஊடல் ஏதுவாக நங்கண் தோன்றுகின்ற சிறிய துனிதன்னால்; நல்லளி வாடினும் பாடு பெறும் - காதலர் செய்யும் நல்ல தலையளி வாடுமாயினும் பெருமை எய்தும். ('தவறின்றி நிகழ்கின்ற ஊடல் கடிதின் நீங்கலின் அத்துன்பமும் நில்லாது' என்பாள், 'சிறு துனி' என்றும், 'ஆராமைபற்றி நிகழ்தலின் அதனான் நல்லளி வாடாது' என்பாள், 'வாடினும்' என்றும், 'பின்னே பேரின்பம் பயக்கும்' என்பாள் 'பாடு பெறும்' என்றும் கூறினாள்.).
மணக்குடவர் உரை:
ஊடலின்கண் எதிராது சாய்ந்தவர் வென்றார்: அவ்வெற்றியை நிலைபெறாநின்ற கூடலின்கண்ணே காணலாகும்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
ஊடல் காரணமாகத் தம்மிடம் தோன்றுகின்ற சிறிய பிணக்கினால் காதலர் செய்யும் நல்லன்பு வாடுமாயினும் அது பெருமையினையே பெறுவதாகும்.
Translation:
My 'anger feigned' gives but a little pain;
And when affection droops, it makes it bloom again.
Explanation:
His love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by (my) dislike.
குறள் 1323:
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதை விடப் புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா?.
மு.வரதராசனார் உரை:
நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ?.
சாலமன் பாப்பையா உரை:
நிலத்தோடு நீர் கலந்தாற்போன்ற ஒற்றுமையை உடைய என்னவரோடு ஊடிப் பெறும் இன்பத்தைப் போலத் தேவர்கள் நாட்டு இன்பம் இருக்குமோ?.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) நிலத்தொடு நீர் இயைந்து அன்னார் அகத்துப் புலத்தலின் - நிலத்தொடு நீர் கலந்தாற்போல ஒற்றுமை உடைய காதலர் மாட்டுப் புலத்தல் போல; புத்தேள் நாடு உண்டோ - நமக்கின்பம் தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ? இல்லை. (நீர் தான் நின்ற நிலத்தியல்பிற்றாமாறு போலக் காதலரும் தாம் கூடிய மகளிரியல்பினராகலான், அதுபற்றி அவரோடு புலவி நிகழும் என்பாள், 'நிலத்தொடு நீர் இயைந்தன்னாரகத்து' என்றும், 'அவர் நமக்கும் அன்னராகலின்', அப்புலவி பின்னே பேரின்பம் பயவாநின்றது' என்பாள், 'புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ' என்றும் கூறினாள், உவமம் பயன்பற்றி வந்தது.).
மணக்குடவர் உரை:
நிலனும் நீரும் பொருந்தினாற்போல ஒன்றுபட்ட நெஞ்சுடையார்மாட்டுப் புலத்தல்போல, இன்பந்தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ?. நிலத்தோடு நீரியைதலால் அவை வெப்பமும் தட்பமும் கூடியிருக்குமாறு போல இன்பமும் துன்பமும் கூட அனுபவிப்பார் மாட்டென்றவாறு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
நிலத்துடன் நீர் கலந்ததைப் போன்ற ஒற்றுமையுடைய காதலரிடத்தில் புலந்து கொள்ளுவதைப் போல நமக்கு இன்பம் தருவதொரு புத்தேள் நாடு உண்டோ?.
Translation:
Is there a bliss in any world more utterly divine,
Than 'coyness' gives, when hearts as earth and water join?.
Explanation:
Is there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water?.
குறள் 1324:
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
இறுகத் தழுவி இணை பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல் அமைகிறது. அந்த ஊடலில்தான் என் உள்ளத்து உறுதியைக் குலைக்கும் படைக்கலனும் இருக்கிறது.
மு.வரதராசனார் உரை:
காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.
சாலமன் பாப்பையா உரை:
என்னவரைத் தழுவிக் கொண்டு, விடாமல் இருப்பதற்குக் காரணமாகிய ஊடலில் அதற்குமேலே சென்று என் உறுதியையும் உடைக்கும் ஆயுதம் இருக்கிறது.
பரிமேலழகர் உரை:
(அப்புலவி இனி யாதான் நீங்கும்? என்றாட்குச் சொல்லியது.) புல்லி விடாப் புலவியுள் தோன்றும் - காதலரைப் புல்லிக் கொண்டு பின் விடாமைக்கு ஏதுவாகிய அப்புலவிக்கண்ணே உளதாம்; என் உள்ளம் உடைக்கும் படை - அதன் மேற்சென்ற என்னுள்ளத்தைக் கெடுக்கும் படைக்கலம். ('புலவியுள்' என்னும் ஏழாவது வினைநிகழ்ச்சிக்கண் வந்தது. என்னுள்ளம் உடைக்கும் படைக்கலம் என்றது, வணக்கத்தையும் பணிமொழியையும் . படைக்கலம் என்றாள், அவற்றான் அப் புலவிஉள்ளம் அழிதலின். புலவி நீங்கும் திறம் கூறியவாறு.).
மணக்குடவர் உரை:
என் உள்ளத்தை அழிக்குங் கருவி, புல்லினவிடத்து விட்டுப் புலந்தவிடத்துத் தோன்றும். அது புணர்ந்த பின்பு தோன்றாமையால் அதனைக் கெடுக்கும் இன்பமுடைத்தென்று கூறியவாறு. படை- பணிமொழி. இவை யெட்டும் தலைமகன் கூற்று.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
என் உள்ளத்தினைக் கெடுக்கும் படைக்கலம், காதலரைத் தழுவிக் கொண்டு பின்னர் விடாமைக்குக் காரணமான அப்புலவியின்கண் உண்டாவதாகும்.
Translation:
'Within the anger feigned' that close love's tie doth bind,
A weapon lurks, which quite breaks down my mind.
Explanation:
In prolonged dislike after an embrace there is a weapon that can break my heart.
குறள் 1325:
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
தவறே செய்யாத நிலையிலும்கூட தன்னுள்ளம் கொள்ளை கொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய தோள்களைப் பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது.
மு.வரதராசனார் உரை:
தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.
சாலமன் பாப்பையா உரை:
ஆண்கள் மீது தவறு இல்லை என்றாலும் தவறு செய்தவராகவே நின்று, மனைவியால் ஊடப்பட்டு தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோள்களைக் கூடப் பெறாதபோது, அந்த ஊடலிலும் ஓர் இன்பம் இருக்கிறது.
பரிமேலழகர் உரை:
(தலைமகளை ஊடல் நீக்கிக் கூடிய தலைமகன் கழியுவகையனாய்த் தன்னுள்ளே சொல்லியது.) தவறு இலராயினும் தாம் வீழ்வார் மென்தோள் அகறலின் - ஆடவர் தங்கண் தவறிலராயினும், உடையார்போல ஊடப்பட்டுத் தாம் விரும்பும் மகளிருடைய மெல்லிய தோள்களைக் கூடப்பெறாத எல்லைக்கண்; ஆங்கு ஒன்று உடைத்து - அவர்க்கு அப்பெற்றியதோர் இன்பம் பயத்தல் உடைத்து. (உடையராயக்கால் இறந்த இன்பத்தோடு வரும் இன்பமுமெய்துவர் ஆகலின், அது மிக நன்று. மற்றை இலராயக்காலும் வரும் இன்பத்தை இகழ்ந்ததில்லை என்னும் கருத்தால், 'தவறிலராயினும் ஆங்கு ஒன்று உடைத்து' என்றான். ஊடலினாய இன்பம் அளவிறத்தலின், 'கூறற்கரிது' என்பான், 'அப்பெற்றியதொன்று' என்றான். 'தவறின்றி' ஊடியதூஉம் எனக்கு இன்பமாயிற்று' என்பதாம்.).
மணக்குடவர் உரை:
தாம் தவறிலராயினும் தாம் காதலிக்கப்பட்டாரது மென்றோள்களை நீங்குதலானே, அஃது ஓரின்பமுடைத்து. இது குற்றம் உண்டாயினும் இல்லையாயினும் ஊடலிற் கூடல் நன்றென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
ஆடவரிடத்தில் தவறு இல்லையென்றாலும் இருப்பதுபோல ஊடுதல் செய்கின்ற (தாம் விரும்பிய), மகளிரது மெல்லிய தோள்களைக் கூடப் பெறாதபோது காதலர்க்கு அப்படிப் பட்டதோர் இன்பம் தரும் தன்மையுடையதாம்.
Translation:
Though free from fault, from loved one's tender arms
To be estranged a while hath its own special charms.
Explanation:
Though free from defects, men feel pleased when they cannot embrace the delicate shoulders of those whom they love.
குறள் 1326:
உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம். அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம்.
மு.வரதராசனார் உரை:
உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.
சாலமன் பாப்பையா உரை:
உண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை விட ஊடுவது காதலுக்கு இனியது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) உணலினும் உண்டது அறல் இனிது - உயிர்க்கு, மேலுண்பதனினும் முன் உண்டது அறுதல் இன்பந்தரும்; காமம் புணர்தலின் ஊடல் இனிது - அதுபோலக் காமத்திற்கு மேற்புணர்தலினும் முன்னைத் தவறு பற்றி ஊடுதல் இன்பம் தரும். ('காமத்திற்கு' என்புழிச் சாரியையும் நான்கனுருபும் விகாரத்தால் தொக்கன. பசித்துண்ணும்வழி மிக உண்ணலுமாய் இன்சுவைத்துமாம்; அது போல,அகன்று கூடும்வழி ஆராததுமாய்ப் பேரின்பத்ததுமாம் எனத் தன் அனுபவம் பற்றிக் கூறியவாறு.).
மணக்குடவர் உரை:
உண்பதினும் உண்டது அறுதல் உடம்பிற்கு இன்பமாம்: அதுபோலக் காமத்திற்குப் புணர்தலினும் ஊடுதல் இன்பமாம். பசியினால் உண்ணும் உணவு இன்பந்தருவது போல ஊடலினால் கூடல் இன்பந் தரும் என்றவாறு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
உண்ணுகின்றபோது உண்டாகின்ற இன்பத்தினைவிட உண்டது சீரணிக்கின்றதால் உண்டாகும் இன்பம் சிறந்ததாகும். அதுபோல் காமத்திற்குப் புணர்தலைவிட ஊடலின்பம் சிறந்ததாகும்.
Translation:
'Tis sweeter to digest your food than 'tis to eat;
In love, than union's self is anger feigned more sweet.
Explanation:
To digest what has been eaten is more delightful than to eat more; likewise love is more delightful in dislike than intercourse.
குறள் 1327:
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார். இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும் போது உணரப்படும்.
மு.வரதராசனார் உரை:
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவார்; அந்த வெற்றியைக் கூடிப் பெறும் இன்பத்தில் அறியலாம்.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) ஊடலில் தோற்றவர் வென்றார் - காமம் நுகர்தற்குரிய இருவருள் ஊடலின்கண் தோற்றவர் வென்றாராவர்; அது கூடலில் காணப்படும் - அது அப்பொழுது அறியப்படாதாயினும், பின்னைப் புணர்ச்சியின்கண் அவரால் அறியப்படும். (தோற்றவர் - எதிர்தலாற்றாது சாய்ந்தவர். அவர் புணர்ச்சிக்கண் பேரின்பம் எய்தலின் வென்றாராயினார். மன்னும் உம்மும் அசைநிலை. 'யான் அது பொழுது சாய்தலின், இது பொழுது பேரின்பம் பெற்றேன்' என்பதாம்.).
மணக்குடவர் உரை:
ஊடலிற் றோன்றும் சிறியதுனி, மிக்க அருள் பெறாதொழியினும் அழகு உடைத்து. புணராதொழியினும் இன்பமாமென்று கூறியவாறு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காமம் நுகர்வதற்குரிய இருவருள் ஊடலின்கண்ணே தோற்றவர் வென்றவராவார். அது அப்போது அறியப்படாததே யாயினும், பின்னர் புணர்ச்சியின் பொது அவரால் அறியப்படும்.
Translation:
In lovers' quarrels, 'tis the one that first gives way,
That in re-union's joy is seen to win the day.
Explanation:
Those are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which follows).
குறள் 1328:
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
நெற்றியில் வியர்வை அரும்பிடக் கூடுவதால் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியுமல்லவா?.
மு.வரதராசனார் உரை:
நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமாக?.
சாலமன் பாப்பையா உரை:
நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா?.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு - இதுபொழுது இவள் நுதல் வெயர்க்கும்வகை கலவியின்கண் உளதாய இனிமையை; ஊடிப் பெறுகுவம் கொல்லோ - இன்னும் ஒரு கால் இவள் ஊடி யாம் பெறவல்லேமோ? (கலவியது விசேடம்பற்றி 'நுதல் வெயர்ப்ப' என்றான். இனிமை: கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிதலானாய இன்பம், 'இனி அப் பேறு கூடாது' எனப் பெற்றதன் சிறப்புக் கூறியவாறு.).
மணக்குடவர் உரை:
நுதல்வெயர்ப்பக்கூடிய கூட்டத்தாலே யுண்டாகிய இன்பத்தை இன்னும் ஒருகால் ஊடிப் பெறுவோமோ?. ஊடுதல் இருவர்க்கும் உண்டாமாதலால் பொதுப்படக் கூறினார். இஃது ஊடினார்க்கு அல்லது இன்பம் பெறுதலரிதென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
இப்பெண்ணின் நுதல் வெயர்க்கும் வகையில் புணர்ச்சியின் கண்ணே உளதாகிய இனிமையை இன்னும் ஒருமுறை இவள் ஊடி யாம் பெறுவோமோ?.
Translation:
And shall we ever more the sweetness know of that embrace
With dewy brow; to which 'feigned anger' lent its piquant grace.
Explanation:
Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?.
குறள் 1329:
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக.
மு.வரதராசனார் உரை:
காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.
சாலமன் பாப்பையா உரை:
ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக்கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும்.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) ஒளி இழை ஊடுக மன் - ஒளியிழையினை உடையாள் இன்னும் எம்மோடு ஊடுவாளாக; யாம் இரப்ப இரா நீடுக மன் - அங்ஙனம் அவள் ஊடிநிற்கும் அதனை உணர்த்துதற் பொருட்டு யாம் இரந்து நிற்றற்கும் காலம் பெறும் வகை, இவ்விரவு விடியாது நீட்டித்தல் வேண்டுக. ('ஊடுக', 'நீடுக' என்பன வேண்டிக்கோடற்பொருளன. 'மன்' இரண்டும் ஆக்கத்தின்கண் வந்தன. ஓகாரங்கள் அசைநிலை. கூடலின் ஊடலே அமையும் என்பதாம்).
மணக்குடவர் உரை:
விளங்கிய இழையினையுடையாள் என்றும் ஊடுவாளாக வேண்டும்: யாம் இவளை இரந்து ஊடல் தீர்க்கும் அளவும் இராப்பொழுது நெடிதாக வேண்டும். இது மனவூக்கத்தின்கண் வந்தது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
ஒளி பொருந்திய அணிகலன்களைக் கொண்ட இப்பெண் எம்முடன் ஊடுதல் செய்வாளாக; அவ்வாறு இவள் ஊடிக் கொள்ளவும் யான் வேண்டி நிற்பதற்கும் காலம் பெரும் வகையில் இரவு நீட்டித்தல் வேண்டும்.
Translation:
Let her, whose jewels brightly shine, aversion feign!
That I may still plead on, O night, prolong thy reign!.
Explanation:
May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!.
குறள் 1330:
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும். எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான்.
மு.வரதராசனார் உரை:
காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
காதல் நுகர்ச்சிக்கு இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கும் இன்பம், அளவு அறிந்து ஊடலை நீக்கிக் கூடித் தழுவுதலே.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது) காமத்திற்கு இன்பம் ஊடுதல் - காமநுகர்ச்சிக்கு இன்பமாவது அதனை நுகர்தற்குரியராவார் ஆராமைபற்றித் தம்முள் ஊடுதல்; அதற்கு இன்பம் கூடி முயங்கப்பெறின் - அவ்வூடுதற்கு இன்பமாவது அதனை அளவறிந்து நீங்கித் தம்முள் கூடி முயங்குதல் கூடுமாயின், அம்முயக்கம். (கூடுதல் - ஒத்த அளவினராதல். முதிர்ந்த துனியாயவழித் துன்பம் பயத்தலானும், முதிராத புலவியாயவழிக் கலவியின்பம் பயவாமையானும், இரண்டற்கும் இடையாகிய அளவறிந்து நீங்குதல் அரிது என்பதுபற்றி, 'கூடிமுயங்கப்பெறின்' என்றான். 'அவ்விரண்டு இன்பமும் யான் பெற்றேன்' என்பதாம்.) ஈண்டுப் பிரிவினை வடநூல் மதம் பற்றிச் செலவு, ஆற்றாமை, விதுப்பு, புலவி என நால்வகைத்தாக்கிக் கூறினார். அவற்றுள் செலவு பிரிவாற்றாமையுள்ளும்; ஆற்றாமை படர் மெலிந்திரங்கல் முதல் நிறையழிதல் ஈறாயவற்றுள்ளும்; விதுப்பு அவர்வயின் விதும்பல் முதல் புணர்ச்சி விதும்பல் ஈறாயவற்றுள்ளும்; புலவி நெஞ்சோடு புலத்தல் முதல் ஊடலுவகை ஈறாயவற்றுள்ளும் கண்டுகொள்க. அஃதேல், வட நூலார் இவற்றுடனே சாபத்தினானாய நீக்கத்தினையும் கூட்டிப் பிரிவினை ஐவகைத்து என்றாரால் எனின், அஃது அறம் பொருள் இன்பம் என்னும் பயன்களுள் ஒன்றுபற்றிய பிரிவு அன்மையானும், முனிவராணையான் ஒரு காலத்து ஓர் குற்றத்துளதாவதல்லது உலக இயல்பாய் வாராமையானும் ஈண்டு ஒழிக்கப்பட்டது என்க.
மணக்குடவர் உரை:
காமத்திற்கு ஊடுதல் இன்பமாம்: அதன்பின் கூடிக்கலக்கப் பெற்றால் அதற்கு இன்பமாம். இது யாம் பெற்றோம்; பிறர் அதன் செவ்வியறியாமையால் பெறுதலரிதென்று கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காம நுகர்ச்சிக்குத் தமக்குள் ஊடல் செய்வது இன்பமாகும்; அந்த ஊடலுக்கு இன்பமானது காதலர் சேர்ந்து தழுவிக் கொள்ளுதலாகும்.
Translation:
A 'feigned aversion' coy to pleasure gives a zest;
The pleasure's crowned when breast is clasped to breast.
Explanation:
Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike.

புலவி நுணுக்கம்


குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: புலவி நுணுக்கம்.

குறள் வரிசை:  1311  1312  1313  1314  1315  1316  1317  1318  1319  1320

குறள் 1311:
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை நான் தழுவ மாட்டேன்.
மு.வரதராசனார் உரை:
பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் ‌பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.
சாலமன் பாப்பையா உரை:
பெண் விரும்பியே! நீ வீதி வழி வரும் குணங்கெட்ட பெண்கள் எல்லாரும் உன் மார்பைத் தம் கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால் அவர்களின் எச்சிலாகிய உன் மார்பை நான் இனிச் சேரேன்.
பரிமேலழகர் உரை:
[அது , ' புலவியது ' நுணுக்கம் என விரியும் .அஃதாவது , தலைமகனும் தலைமகளும் ஒர் அமளிக்கண் கூடியிருந்துழி அவன் மாட்டுப் புலத்தற் காரண மில்லையாகவும் , காதல் கைம்மிகுதலான் நூண்ணியதோர் காரணமுளதாக உட்கொண்டு , அதனை அவன்மேலேற்றி அவள் புலத்தல். காரணத்தின் நுணுக்கம் காரியத்தின்மேல் நின்றது . அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]

(உலாப்போய் வந்த தலைமகன் பள்ளியிடத்தானாகத் தலைமகள் சொல்லியது.) பரத்த - பரத்தைமையுடையாய்; பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பர் - நின்னைப் பெண் இயல்பினையுடையார் யாவரும் தம் கண்ணான் பொதுவாக உண்பர்; நின் மார்பு நண்ணேன் - அதனால் அவர் மிச்சிலாய நின் மார்பினைப் பொருந்தேன். (கற்பு நாண் முதலிய நற்குணங்களின்மையின் பரத்தையர்க்குள்ளது பெண் இயற்கை மாத்திரமே என்னுங் கருத்தால், 'பெண் இயலார்' என்றாள். பொதுவாக உண்டல் - தஞ்சேரிச் செலவின் முறையானன்றி ஒரு காலத்து ஒருங்கு நோக்குதல்; அதுவும் ஓர் குற்றம். தாம் நோக்கி இன்புற்றவாறே அவரும் நோக்கி இன்புறுவர் என ஆசங்கித்து அவர்பாற் பொறாமை எய்துதலின், நுணுக்கமாயிற்று.).
மணக்குடவர் உரை:
என் புலவியைச் சாகவிட்டிருக்க வல்லாரோடு என்னெஞ்சு, கூடுவேமென்று நினைக்கின்றது தன்னாசைப்பாட்டால். இத புலவி நீங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் புலவி தீர்வாளாய்ச் சொல்லியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பரத்தமையுடையவனே, பெண் தன்மையுடையார் அனைவரும் உன்னைக் கண்ணால் பொதுவாக உண்பர். ஆதலால் உன்னுடைய மார்பினைப் பொருந்தேன்.
Translation:
From thy regard all womankind Enjoys an equal grace;
O thou of wandering fickle mind, I shrink from thine embrace.
Explanation:
You are given to prostitution; all those who are born as womankind enjoy you with their eyes in an ordinary way. I will not embrace you.
குறள் 1312:
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை நீடுவாழ்க என வாழ்த்துவேன் என்று நினைத்து.
மு.வரதராசனார் உரை:
காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.
சாலமன் பாப்பையா உரை:
நான் அவரோடு ஊடிப் பேசாமல் இருந்தேன்; நீடு வாழ்க, என்று சொல்லி அவரோடு பேசுவேன். என்று எண்ணி, வேண்டும் என்றே தும்மினார்! நானா பேசுவேன்? (ஆனாலும் வாழ்த்தினாள்).
பரிமேலழகர் உரை:
(தலைமகன் நீக்கத்துச் சென்ற தோழிக்குத் தலைமகள் பள்ளியிடத்து நிகழ்ந்தது கூறியது.) ஊடி இருந்தேமாத் தும்மினார் - யாம் தம்மோடு ஊடி உரையாடாதிருந்தேமாகக் காதலர் தும்மினார்; யாம் தம்மை நீடுவாழ்கென்பாக்கு அறிந்து - அது நீங்கித் தம்மை நீடுவாழ்கென்று உரையாடுவேமாகக் கருதி. (தும்மியக் கால் வாழ்த்துதல் மரபாகலான், உரையாடல் வேண்டிற்று என்பதாம். இயல்பான் நிகழ்ந்த தும்மலைக் குறிப்பான் நிகழ்ந்ததாகக் கோடலின், நுணுக்கமாயிற்று.).
மணக்குடவர் உரை:
தம்மோடு புலந்து உரையாடாது இருந்தேமாக: அவ்விடத்து யாம் தம்மை நெடிதுவாழுவீரென்று சொல்லுவே மென்பதனை யறிந்து தும்மினார். இது தலைமகள் தோழிக்குக் கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
யாம் காதலரோடு ஊடுதல் செய்து உரையாடிக் கொண்டிருந்தபோது அது நீக்கித் தம்மை நீடுவாழ்கவென்று கூறுவோம் எனக் கார்த்திக் காதலர் தும்மினார்.
Translation:
One day we silent sulked; he sneezed: The reason well I knew;
He thought that I, to speak well pleased, Would say, 'Long life to you!'.
Explanation:
When I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life.
குறள் 1313:
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
கிளையில் மலர்ந்த பூக்களைக் கட்டி நான் அணிந்து கொண்டிருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே அணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள்.
மு.வரதராசனார் உரை:
கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு மாற்றம் கருதி, ஒருமுறை, மரத்திலே மலர்ந்த பூவை மாலையாக்கிச் சூடினேன். அதற்கு அவள், நீர் விரும்பும் எவளுக்கோ அடையாளம் காட்டிச் சூடினீர் என்று சினந்து நின்றாள்.
பரிமேலழகர் உரை:
(தலைமகள் புலவிக் குறிப்பினைக் கண்டு, நீவிர் கூடியொழுகா நிற்கவும் இது நிகழ்தற்குக் காரணம் யாது? என்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது.) கோட்டுப்பூச் சூடினும் - யான் கோடுதலைச்செய்யும் மாலையைச் சூடினேனாயினும்; ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று காயும் - நும்மாற்காதலிக்கப்பட்டாள் ஒருத்திக்கு இப்பூவணி காட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளாநிற்கும்; இத்தன்மையாட்கு ஒரு காரணம் வேண்டுமோ? ('கோடு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். பூ - ஆகுபெயர், வளையமாகச் சூடினும் என்பதாம்; 'கோட்டம் கண்ணியும் கொடுந்திரையாடையும்' (புறநா.275)என்றார் பிறரும். இனி, 'அம்மருதநிலத்துப் பூவன்றி வேற்றுநிலத்துக் கோட்டுப்பூவைச் சூடினேனாயினும், ஈண்டையாள், பிறளொருத்திக்கு அவ்வேற்றுப் பூவணிகாட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளும்', எனினும்அமையும்.).
மணக்குடவர் உரை:
பக்கப்பூச் சூடினும் ஒருத்திக்குக் காட்டுதற்காகச் சூடினீரென்று சொல்லிக் காயும். பக்கப்பூ- ஒப்பனைப்பூ. கோட்டுப்பூ சூடினீர் என்பதற்கு வளைப்பூச்சூடினீரெனினுமாம். இது கோலஞ்செய்யினும் குற்றமென்று கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
வளைவாகிய பூமாலையைச் சூடிக் கொண்டிருந்தேனாயினும் உம்மால் காதலிக்கப்பட்டாள் ஒருத்திக்குக் காட்டவேண்டியே சூடினீர் என்று தலைவி கோபித்துக் கொள்ளுவாள்.
Translation:
I wreathed with flowers one day my brow, The angry tempest lowers;
She cries, 'Pray, for what woman now Do you put on your flowers?'.
Explanation:
Even if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman.
குறள் 1314:
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன் என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக எடுத்துக் கொண்டு யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும் எனக் கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டாள்.
மு.வரதராசனார் உரை:
யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; ய‌ாரை விட...? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.
சாலமன் பாப்பையா உரை:
காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள்.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) யாரினும் காதலம் என்றேனா - காமம் நுகர்தற்குரிய இருவராயினார் யாவரினும் யாம் மிக்க காதலையுடையேம் என்பது கருதி யாரினும் காதலம் என்றேனாக; யாரினும் யாரினும் என்று ஊடினாள் - நின் தோழி அது கருதாது, என்னாற் காதலிக்கப்பட்ட மகளிர் பலருள்ளும் நின்கண் காதலுடையேன் என்றேனாகக் கருதி, அம் மகளிர் யாரினும் என்கண் காதலுடையராயினீர் என்று சொல்லிப் புலந்தாள். (தலைமகள் கருத்திற்குத் தன்மைப் பன்மை உயர்ச்சிக்கண் வந்தது. 'யான் அன்பு மிகுதியாற் சொல்லியதனைக் கருத்து வேறுபடக் கொண்டதல்லது பிறிது காரணமில்லை', என்பதாம்.).
மணக்குடவர் உரை:
ஒருவனும் ஒருத்தியுமாகி அன்பினால் புணர்ந்தார் யாவரினும் யாம் காதலுடையே மென்று சொன்னேனாக, அதனை அவ்வாறு கொள்ளாது, நீர் அன்புபட்டார் பலருள்ளும் யாரினும் அன்புடையீ ரென்று சொல்லி ஊடினாள்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காமம் அனுபவத்தற்குரிய இருவருள்ளும் "யாம் மிக்க காதலுடையோம்" எனக்கருதி, "யாரினும் காதலம்" என்று கூறினேன். அப்படி நினைக்காமல் "என்னால் காதலிக்கப்பட்ட மகளிர் பலருள்ளும் நின்கண் அதிகக் காதலுடையேம்" என்று கூறினேன் என்பதாகக் கருதி அவள் ஊடிக்கொண்டாள்.
Translation:
'I love you more than all beside,' 'T was thus I gently spoke;
'What all, what all?' she instant cried; And all her anger woke.
Explanation:
When I said I loved her more than any other woman, she said "more than others, yes, more than others," and remained sulky.
குறள் 1315:
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம் என்று நான் சொன்னவுடன் அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா? எனக் கேட்டு கண்கலங்கினாள் காதலி.
மு.வரதராசனார் உரை:
இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.
சாலமன் பாப்பையா உரை:
காதல் மிகுதியில் இந்தப் பிறவியில் நான் உன்னைப் பிரியேன் என்று சொன்னேன்; அப்படி என்றால் அடுத்த பிறவியில் பிரியப்போவதாக எண்ணிக் கண் நிறைய நீரினைக் கொண்டாள்.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனா - காதல் மிகுதியான் இம்மையாகிய பிறப்பின்கண் யாம் பிரியேம் என்று சொன்னேனாக; கண் நிறை நீர் கொண்டனள் - அதனான் ஏனை மறுமையாகிய பிறப்பின்கண் பிரிவல் என்னும் குறிப்பினேனாகக் கருதி, அவள் தன் கண்நிறைந்த நீரினைக் கொண்டாள் ( 'வெளிப்படுசொல்லைக் குறிப்புச் சொல்லாகக் கொள்கின்றதல்லது என்பால் தவறில்லை', என்பதாம்.).
மணக்குடவர் உரை:
இப்பிறப்பிலே யாம் பிரியோமென்று சொன்னேனாக, அதனால் மறுபிறப்பின்கண் பிரிவுண்டென்று கருதிக் கண்ணிறைய நீர் கொண்டாள்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காதல் மிகுதியால் இப்பிறப்பில் பிரியேன் என்று கூறினேன். அதனால் மறுபிறப்பில் பிரிவேன் என்று குறித்ததாகக் கருதி, தன்னுடைய கண்களில் நிறைந்த நீரினைக் கொண்டாள்.
Translation:
'While here I live, I leave you not,' I said to calm her fears.
She cried, 'There, then, I read your thought'; And straight dissolved in tears.
Explanation:
When I said I would never part from her in this life her eyes were filled with tears.
குறள் 1316:
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
உன்னை நினைத்தேன் என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்; அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்? எனக்கேட்டு ஏன் மறந்தீர்? என்று அவள் ஊடல் கொண்டாள்.
மு.வரதராசனார் உரை:
நினைத்தேன் என்று கூறி‌னேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.
சாலமன் பாப்பையா உரை:
எப்போதும் உன்னைத்தான் எண்ணினேன் என்றேன். சில சமயம் மறந்து ஒரு சமயம் நினைத்ததாக எண்ணி அப்படியானால் என்னை இடையில் மறந்திருக்கிறீர் என்று சொல்லித் தழுவத் தொடங்கியவள், விட்டுவிட்டு ஊடத் தொடங்கினாள்.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) உள்ளினேன் என்றேன் - பிரிந்த காலத்து நின்னையிடையின்றி நினைந்தேன் என்னும் கருத்தால், யான் உள்ளினேன் என்றேன்; மற்று என் மறந்தீர் என்று என்னைப் புல்லாள் புலத்தக்கனள் - என, அதனை ஒருகால் மறந்து பின் நினைந்தேன் என்றதாகக் கருதி, என்னை யிடையே மறந்தீர் என்று சொல்லி, முன் புல்லுதற்கு அமைந்தவள் அஃதொழிந்து புலத்தற்கு அமைந்தாள். (மற்று - வினை மாற்றின்கண் வந்தது. அருத்தாபத்திவகையான் மறத்தலையுட்கொண்டு புலந்தாள் என்பதாம்.).
மணக்குடவர் உரை:
அவ்விடத்து எம்மை நினைத்தோமென்றீர்: மறந்தாரன்றே நினைப்பார். ஆதலான் எங்களை மறந்தீரென்று சொல்லி எம்மை முயங்காளாய்ப் புலவிக்குத் தகுதியாளாயினாள். இது நினைத்தோமெனினும் குற்றமென்று கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பிரிந்திருந்தபோது உன்னையே இடைவிடாமல் நினைத்துக் கொண்டிருந்தேன் என்னும் கருத்தால் 'உள்ளினேன்' என்று கூறினேன். அதற்கு, 'மறந்திருந்துதானே நினைத்தீர்' என்று கூறித் தழுவதற்கு இருந்தவள் பிணங்கிக் கொண்டாள்.
Translation:
'Each day I called to mind your charms,' 'O, then, you had forgot,'
She cried, and then her opened arms, Forthwith embraced me not.
Explanation:
When I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislike.
குறள் 1317:
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
தும்மினேன்; வழக்கப்படி அவள் என்னை வாழ்த்தினாள். உடனே என்ன சந்தேகமோ யார் உம்மை நினைத்ததால் தும்மினீர் என்று கேட்டு, முதலில் அளித்த வாழ்த்துக்கு மாறாக அழத் தொடங்கிவிட்டாள்.
மு.வரதராசனார் உரை:
யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்?.
சாலமன் பாப்பையா உரை:
நான் தும்ம, அவள் இயல்பாகவே வாழ்த்தினாள்; அப்படி வாழ்த்தியவளே மறுபடியும் நீர் இப்போது எவள் உம்மை நினைத்ததால் தும்மினீர், என்று கேட்டு ஊடி அழுதாள்.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) தும்மினேனாக வழுத்தினாள் - கூடியிருக்கின்றவள் யான் தும்மினேனாகத் தன் இயற்கை பற்றி வாழ்த்தினாள்; அழித்து யார் உள்ளித் தும்மினீர் என்று அழுதாள் - அங்ஙனம் வாழ்த்திய தானே மறித்து, நும்மை நினைத்து வருந்துகின்ற மகளிருள் யாவர் நினைத்தலால் தும்மினீர்? என்று சொல்லிப் புலந்தழுதாள். (வாழ்த்தலொடு புலத்தல் இயையாமையின், 'அழித்து' என்றான். அன்புடையார் நினைத்தவழி அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் தோன்றும் என்பது மகளிர் வழக்கு. 'இல்வழக்கை உள்வழக்காகக் கருதிப் புலந்தாள்' என்பதாம்.).
மணக்குடவர் உரை:
யாம் தும்மினேம்; அதற்காக வாழ்த்தினாள்; நும்மை யார் நினைக்கத் தும்மினீர் என்று சொல்லி மீட்டும் அழுதாள். இது தும்மினும் குற்றமென்று கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
கூடி இருந்தவள் நான் தும்மினபோது இயல்பாக வாழ்த்தினாள். வாழ்த்தியவுடனே 'உம்மை நினைத்து வருந்துகின்ற பெண்களுள் யாவர் நினைத்தலால் தும்மினீர்' என்று புலந்து அழுதாள்.
Translation:
She hailed me when I sneezed one day; But straight with anger seized,
She cried; 'Who was the woman, pray, Thinking of whom you sneezed?'.
Explanation:
When I sneezed she blessed me, but at once changed (her mind) and wept, asking, "At the thought of whom did you sneeze?".
குறள் 1318:
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஊடல் கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்த அவள் ஓ உமக்கு நெருங்கியவர் உம்மை நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ? எனக் கேட்டு அழுதாள்.
மு.வரதராசனார் உரை:
அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள்.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தமுறை தும்மல் வர அதனை வெளிப்படுத்தாமல் நான் அடக்கினேன்; அதைப் பார்த்து யாரோ உமக்கு வேண்டியவர்கள் உம்மை நினைப்பதை நான் அறிந்துவிடக்கூடாது என்று எனக்கு மறைக்கிறீரோ, என்று ஊடி அழுதாள்.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) தும்முச் செறுப்ப - எனக்குத் தும்மல் தோன்றியவழி, யார் உள்ளித் தும்மினீர்? என்று புலத்தலை அஞ்சி, அதனையான் அடக்கினேன், அங்ஙனம் அடக்கவும்; நுமர் உள்ளல் எம்மை மறைத்திரோ என்று அழுதாள் - நுமர் நும்மை நினைத்தலை எம்மை மறைக்கல் உற்றீரோ என்று சொல்லிப் புலந்தழுதாள். ('தும்மு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். செறுப்ப என்புழி இறந்தது தழீஇய எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. எம்மை என்பது 'நும்மோடு யாதுமியைபில்லாத எம்மை' என்பதுபட நின்ற இசையெச்சம். இதனை வடநூலார் 'காகு' என்ப. 'தும்மினும் குற்றம், ஒழியினும் குற்றமாயக்கால் செயற்பாலது யாது'? என்பதாம்.).
மணக்குடவர் உரை:
தும்மல் தோற்ற அதனை யடக்கினேன். அதற்காக நுமர் உள்ளினமையை எமக்கு மறைக்கின்றீரோ வென்று சொல்லி அழுதாள். இது தும்மாதொழியினும் குற்றமென்று கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
எனக்குத் தும்மல் வந்தபோது அதனை யான் அடக்கினேன். அவள், 'உன்னுடைய காதலியர் உம்மை நினைப்பதை யான் அறியாதபடி மறைக்கின்றீரோ' என்று சொல்லிப் புலந்து அழுதாள்.
Translation:
And so next time I checked my sneeze; She forthwith wept and cried,
(That woman difficult to please), 'Your thoughts from me you hide'.
Explanation:
When I suppressed my sneezing, she wept saying, "I suppose you (did so) to hide from me your own people's remembrance of you".
குறள் 1319:
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
நான் பணிந்து போய் அவள் ஊடலை நீக்கி மகிழ்வித்தாலும், உடனே அவள் ஓ! நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ? என்று சினந்தெழுவாள்.
மு.வரதராசனார் உரை:
ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று ‌சொல்லிச் சினம் கொள்வாள்.
சாலமன் பாப்பையா உரை:
ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும். நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லி சினம் கொள்வாள்.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) தன்னை உணர்த்தினும் காயும் - இவ்வாற்றான் ஊடிய தன்னை யான் பணிந்து உணர்த்துங்காலும் வெகுளா நிற்கும்; பிறர்க்கும் நீர் இந்நீரர் ஆகுதிர் என்று - பிற மகளிர்க்கும் அவர் ஊடியவழி இவ்வாறே பணிந்துணர்த்தும் நீர்மையையுடையீராகுதிர், என்று சொல்லி. ('இவள் தெளிவித்தவழியும் தெளியாள் என்பதுபற்றி என்மேல் ஏற்றிய தவற்றை உடம்பட்டுப் பணிந்தேன்; பணிய, அது தானும் புலத்தற்கு ஏதுவாய் முடிந்தது. இனி இவள் மாட்டு செய்யத் தகுவது யாது'? என்பதாம்.).
மணக்குடவர் உரை:
தன்னை ஊடல் தீர்த்தற்கு உணர்த்தினும், பிறர்க்கும் நீர் இவ்வாறு செய்வீரே யென்றுசொல்லி வெகுளும். இது தன்னைப் போற்றினும் குற்றமென்று கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
இவ்வாறு ஊடுதல் செய்கின்றாளே என்று யான் பணிந்து என்னை உணர்த்தினேன். அப்போதும், பிற பெண்கள் ஊடுதல் செய்யும்போதும் இப்படித்தான் பணிதல் தன்மையுடையவரோ என்று சொல்லிக் கோபித்துக் கொண்டாள்.
Translation:
I then began to soothe and coax, To calm her jealous mind;
'I see', quoth she, 'to other folks How you are wondrous kind' .
Explanation:
Even when I try to remove her dislike, she is displeased and says, "This is the way you behave towards (other women)."
குறள் 1320:
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஒப்பற்ற அவளுடைய அழகை நினைத்து அவளையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், யாருடன் என்னை ஒப்பிட்டு உற்றுப் பார்க்கிறீர் என்று கோபம் கொள்வாள்.
மு.வரதராசனார் உரை:
அவளுடைய அழகை நி‌னைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்வாள்.
சாலமன் பாப்பையா உரை:
என் பேச்சிலும், செயலிலும் அவள் கோபம் கொள்வதால், பேசாமல், அவள் உறுப்புகளின் அழகை எண்ணி அவற்றையே பார்த்திருப்பேன். அதற்கு எவள் உறுப்புப் போல் இருக்கிறதென்று என் மேனியைப் பார்க்கிறீர். என்று சொல்லிச் சினப்பாள்.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) நினைத்து இருந்து நோக்கினும் காயும் - என் சொற்களும் செயல்களும் பற்றித் தான் வெகுடலான், அவற்றையொழிந்திருந்து தன் அவயங்களது ஒப்பின்மையை நினைந்து அவற்றையே நோக்கினும் என்னை வெகுளாநிற்கும்; அனைததும் நீர் நோக்கினீர் யார் உள்ளி என்று - நீர் என் அவயவமனைத்தும் நோக்கினீர, அவற்றது ஒப்புமையான் எம் மகளிரை நினைந்து? என்று சொல்லி. ('யான் எல்லா அவயங்களானும் ஒருத்தியொடு ஒத்தல் கூடாமையின், ஒன்றால் ஒருவராகப் பலரையும் நினைக்கவேண்டும்; அவரெல்லாரையும் யான் அறியச் சொல்லுமின்', என்னுங் கருத்தால் 'அனைத்தும் நோக்கினீர் யாருள்ளி'? என்றாள். 'வாளாவிருத்தலும் குற்றமாயிற்று' என்பதாம்.).
மணக்குடவர் உரை:
தனது உறுப்புகளோடு வேறொன்றை உவமிக்க ஒண்ணாமையை யெண்ணி நோக்க இருப்பினும், என்னுறுப் பெல்லாம் நீர் காதலித்தவர்களில் யாருறுப்புக்கு ஒக்குமென்று நினைத்திருந்து நோக்கினீரென்று சொல்லி வெகுளும். இது பார்க்கிலும் குற்றமென்று கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
என் சொற்களுக்கும் செயல்களுக்கும் அவள் கோபிப்பதால் நான் பேசாமல், அவளுடைய உறுப்புக்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய உறுப்புக்களை வேறு பெண்களின் உறுப்புக்களுடன் ஒப்புட்டு நோக்கீனிர் என்று கூறிக் கோபித்துக் கொண்டாள்.
Translation:
I silent sat, but thought the more, And gazed on her. Then she
Cried out, 'While thus you eye me o'er, Tell me whose form you see'.
Explanation:
Even when I look on her contemplating (her beauty), she is displeased and says, "With whose thought have you (thus) looked on my person?".

புலவி


குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: புலவி.

குறள் வரிசை:  1301  1302  1303  1304  1305  1306  1307  1308  1309  1310

குறள் 1301:
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக.
மு.வரதராசனார் உரை:
( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.
சாலமன் பாப்பையா உரை:
நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்.
பரிமேலழகர் உரை:
[அஃதாவது , இருவர் நெஞ்சும் புணர்ச்சி விதும்பாது புலக்கக் கருதியவழி ஒருவரோடு ஒருவர் புலத்தல் . அதிகார முறையையும் இதனானே விளங்கும் .]

(வாயிலாகச் சென்ற தோழி தலைமகள் வாயில் நேர்தற்பொருட்டு அவளொடு நகையாடிச் சொல்லியது.) அவர் உறும் அல்லல் நோய் சிறிது காண்கம் - அங்ஙனம் புலந்தால் காதலரெய்தும் அல்லல் நோயினை யாம் சிறிது காணக்கடவோம்; புல்லாது இராப் புலத்தை - நீ அவரை விரைந்து சென்று புல்லாதே; இத்தொழிலை மேலிட்டுக் கொண்டிருந்து புலப்பாயாக. (அல்லல் நோய் - துன்பத்தைச் செய்யும் காமநோய். 'சிறிது' என்றாள், புலவியை நீள விடலாகாது என்பது பற்றி. 'புலத்தை' என்புழி ஐகாரம் 'கடம்பூண்டொருகால் நீ வந்தை' (கலித்.குறிஞ்சி.27) என்புழிப்போல, முன்னிலை வினை விகுதி. 'புலத்தி' என்பதூஉம் பாடம். புலவிக்குறிப்புக்கண்டு அவள் வழியளாய் நின்று, 'நாம் உற்ற வருத்தம் அவரும் சிறிதுற்று அறிதல் வேண்டும்' என நகையாடி நேர்வித்தவாறு.).
மணக்குடவர் உரை:
நம் காதலர் வந்தால் புல்லாதிருந்து புலத்தல் வேண்டும்: அவ்விடத்து அவருறும் கலக்கத்தை யாம் சிறிது காண்பேமாக. இது வாயில் வேண்டிச் சென்ற தோழி தலைமகள் புலவிக் குறிப்புக் கண்டு முகங்கொடாமைப் பொருட்டு இனிமை கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
புலந்து கொண்டிருந்தால் காதலர் அடையும் வேதனையைச் சிறிது காண முடியும். ஆதலால் நீ விரைந்து சென்று அவரைத் தழுவாமல் புலந்து (பிணங்கிக்) கொண்டிருப்பாயாக.
Translation:
Be still reserved, decline his profferred love;
A little while his sore distress we 'll prove.
Explanation:
Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not.

குறள் 1302:
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஊடலுக்கும் கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல் ஓரளவுடன் இருக்க வேண்டும். அந்தக் கால அளவு நீடித்தால் உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும்.
மு.வரதராசனார் உரை:
உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
உணவின் அளவிற்கு ஏற்ப உப்பின் அளவு அமைவதை போல், கலவி இன்பத்திற்கு வேண்டும் அளவிற்கு ஏற்ப ஊடல் அமையட்டும்; அதை அளவு கடந்து கொஞ்சம் நீட்டினாலும், உப்பின் அளவைக் கூட்டுவது போல் ஆகும்.
பரிமேலழகர் உரை:
(புலவியொழிந்து வாயில் நேரும் வகை அவள் சொல்லியது.) புலவி உப்பு அமைந்தற்று - புலவி கலவி இன்பம் செயற்கு வேண்டுமளவிற்றாதல் உப்புத் துய்ப்பனவற்றை இன்சுவையாக்கற்கு வேண்டுமளவிற்றாதல் போலும்; சிறிது நீளவிடல் அது மிக்கற்று - இனி அதனை அவ்வளவில் சிறிது மிகவிடுதல் அவ்வுப்பு அளவின் மிக்காற்போலும். (நீள விடல் - அளவறிந்துணராது கலவிமேல் எழுந்த குறிப்பழுங்குமளவும் செய்தல். 'சிறிது நீள விடலாகாது' என்றாள், நேர்விக்கின்றாளாகலின். 'உப்பு மிக்க வழித் துய்ப்பது சுவையின்றானாற் போலப் புலவி மிக்கவழிக் கலவி இன்ப மின்றாம்' என்றமையின், இது பண்பு உவமை.).
மணக்குடவர் உரை:
நுகர்வனவற்றிற்கு உப்பமைந்தாற்போல இனிமை யுண்டாக்கும் புலவி: அதனை நீளவிடல் அவ்வுப்பு சிறிது மிக்காற்போல இன்னாதாம். இது வாயில் வேண்டிய தோழிக்குத் தலைமகள் மறுத்த விடத்துப் புலவியை நீளவிடுதல் தகாதென்று அவள் கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
கலவியின்பத்திற்குப் புலவியானது உண்ணும் பண்டங்களுக்குச் சுவை தரும் உப்பின் அளவு போன்றதாகும். இனி அதனை அளவின்றிச் சிறிது மிக விடுதல் உப்பு அளவின் மிகுந்துவிட்டது போன்றதாகும்.
Translation:
A cool reserve is like the salt that seasons well the mess,
Too long maintained, 'tis like the salt's excess.
Explanation:
A little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too much.

குறள் 1303:
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும்.
மு.வரதராசனார் உரை:
தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
தன்னுடன் ஊடல் கொண்ட மனைவியின் ஊடலை நீக்கிக் கூடாமல் போவது, ஏற்கனவே துன்பப்பட்டவர்களுக்கு மேலும் அதிகத் துன்பத்தைக் கொடுத்தது போலாம்.
பரிமேலழகர் உரை:
(பரத்தையர் இடத்துநின்றும் வந்த தலைமகனொடு தலைமகள் புலந்து சொல்லியது.) தம்மைப் புலந்தாரைப் புல்லாவிடல் - தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக்கலவாது ஆடவர் சேறல்; அலந்தாரை அல்லல் நோய் செய்தற்று - பண்டே துன்பமுற்று அழிந்தாரை அதன் மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற்போலும். ('பிறர்பால் சேறலின் நும்மைப் பெறாது புலந்தூடியிருக்கின்ற பரத்தையரைப் போய்ப் புலவி நீக்கிப் புல்லீராயின், அவராற்றார்' என்பதாம்.
மணக்குடவர் உரை:
தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவிநீக்கிக் கலவாது ஆடவர் சேறல், பண்டே துன்பமுற்றழிந்தாரை அதன் மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற்போலும்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தம்மைப் பெறாமல் புலந்து கொண்டிருக்கும் மகளிரை, அப்புலவி நீக்கி ஆடவர் கலவாதிருத்தல் முன்னமேயே துன்புற்று அலந்தாரை மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கினது போன்றதாகும்.
Translation:
'Tis heaping griefs on those whose hearts are grieved;
To leave the grieving one without a fond embrace.
Explanation:
For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony.

குறள் 1304:
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்.
மு.வரதராசனார் உரை:
பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) ஊடியவரை உணராமை - நும்மோடு ஊடிய பரத்தையரை ஊடலுணர்த்திக் கூடாதொழிதல்; வாடிய வள்ளி முதல் அரிந்தற்று - பண்டே நீர் பெறாது வாடிய கொடியை அடியிலே அறுத்தாற் போலும். ('நீர் பரத்தையரிடத்தில் ஆயவழி எம் புதல்வரைக் கண்டு ஆற்றியிருக்கற்பாலமாய யாம் நும்மோடு ஊடுதற்குரியமல்லம் அன்மையின், எம்மை உணர்த்தல் வேண்டா; உரியராய் ஊடிய பரத்தையரையே உணர்த்தல் வேண்டுவது; அதனால் ஆண்டுச் சென்மின்', என்பதாம்.).
மணக்குடவர் உரை:
நும்மோடு ஊடிக்கண்டும் இவையிற்றால் வரும் பயன் இல்லை: நின்னோடு நெருநல் ஊடிய காமக்கிழத்தியரை ஊடல் தீராது பெயர்தல், வாடிய கொடியை அடியிலே அறுத்தாற்போலும். இது காமக்கிழத்தியரை ஊடல் தீராமை தீது; ஆண்டுப் போமேன்ற தலைமகள் கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தம்முடன் ஊடிய மகளிரை ஊடல் நீக்கிக் கூடாதிருத்தல் முன்னமேயே நீரின்றி வாடிய கொடியை அடியிலே அறுத்தது போன்றதாகும்.
Translation:
To use no kind conciliating art when lover grieves,
Is cutting out the root of tender winding plant that droops.
Explanation:
Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root.

குறள் 1305:
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும்.
மு.வரதராசனார் உரை:
நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குணங்களால் உயர்ந்தவருக்கு அழகு தருவது, பூப்போன்ற கண்ணை உடைய மனைவியின் மனத்தே நடக்கும் ஊடலின் மிகுதியே.
பரிமேலழகர் உரை:
(தலைமகளைப் புலவி நீக்கிக் கூடிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது) நலத்தகை நல்லவர்க்கு ஏர் - நற்குணங்களால் தகுதியுடையராய தலைவர்க்கும் அழகாவது; பூ அன்ன கண்ணார் அகத்துப் புலத்தகை - தம் பூவன்ன கண்ணார் நெஞ்சின்கண் நிகழும் புலவி மிகுதியன்றே (சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'தவறில்லார்க்கும் புலவி இனிது' என்பான், 'நலத்தகை நல்லவர்க்கும்' என்றான். அழகு - இன்பப் பயனைத் தலைப்படுதல் தான் நுகர்ந்த இன்பத்திற்கு ஏதுவாகிய புலவியை வியந்து கூறியவாறு.).
மணக்குடவர் உரை:
நலத்தகையினானே நல்லாரான பரத்தையர்க்கு ஓரழகாம், பூ வன்னகண்ணார்மாட்டுப் புலத்தல். நமக்கு ஆவார்மாட்டுப் புலத்தல் தீதென்றவாறு. இது பரத்தையரோடு புலந்து கூறிய தலைமகட்குத் தோழி கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
நற்குணங்களால் தகுதியுடையவரான தலைவர்க்கு அழகாவது என்னவென்றால், பூப்போன்ற கண்ணினை யுடைய மகளிரின் நெஞ்சில் நிகழும் புலவி மிகுதியேயாகும்.
Translation:
The Even to men of good and worthy mind, the petulance
Of wives with flowery eyes lacks not a lovely grace.
Explanation:
An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands.

குறள் 1306:
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்.
மு.வரதராசனார் உரை:
பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.
சாலமன் பாப்பையா உரை:
வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும் இல்லாது போய்விட்டால், காதல் நிறைந்த இல்லறம், முதிர்ந்த பழமும் இளங்காயும் போல் ஆகிவிடும்.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) துனியும் புலவியும் இல்லாயின் - முதிர்ந்த கலாம் ஆகிய துனியும், இளைய கலாம் ஆகிய புலவியும் இல்லையாயின்; காமம் கனியும் கருக்காயும் அற்று - காமம் செவ்வி முதிர்ந்த பழமும் இளங்காயும் போலும். (மிகமுதிர்ந்திறும் எல்லைத்தாய கனி நுகர்வார்க்கு மிகவும் இனிமை செய்தலின் துனியில்லையாயின், 'கனியற்று' என்றும், கட்டிளமைத்தாய காய் நுகரும் செவ்வித் தன்றாகலின் புலவியில்லையாயின் 'கருக்காயற்று' என்றும் கூறினான். இவ்விரண்டும் வேண்டும் என்று வியந்து கூறியவாறு.).
மணக்குடவர் உரை:
உணராது நீட்டிக்கின்ற துனியும் உணர மீள்கின்ற புலவியும் இல்லையாயின் காமம் அழுகிய பழம்போலப் புளிக்கும்: காய்போலத் துவர்க்கும் ஆதலால். இஃது உணர்தற்கு நல்லது உளதென்று தலைமகள் கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
முதிர்ந்த பிணக்காகிய துனியும் இளைய பிணக்காகிய புலவியும் இல்லையானால், காமம் அதிகமாகப் பழுத்துவிட்ட கனியும் இளங்காயும் போன்றதாகும்.
Translation:
Love without hatred is ripened fruit;
Without some lesser strife, fruit immature.
Explanation:
Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit.

குறள் 1307:
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
கூடி மயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டு.
மு.வரதராசனார் உரை:
கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:
இனிக் கலவி நீளுமோ நீளாதோ என்று எண்ணுவதால், இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) புணர்வது நீடுவது (கொல்) அன்று கொல் என்று - இனிய புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று கருதலான்; ஊடலின் ஓர் துன்பம் உண்டு - இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலின் கண்ணேயும் ஒரு துன்பம் நிகழும். ('என்று' என்னும் எச்சத்திற்குக் 'கருதலான்' என்பது வருவிக்கப்பட்டது. சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது, 'கொல்' என்பதனை 'நீடுவது' என்பதுடனும் கூட்டுக. 'ஆங்கு' என்பது அசைநிலை. ஊடல் - கூடற்கண் விரைவித்தல் கூறியவாறு.).
மணக்குடவர் உரை:
குளிர்ச்சியைத் தனக்கு இயல்பாகவுடைய நீரும் நிழலின் கண்ணதே யாயின், இனிதாம்: அதுப்போலப் புலவியும் அன்புடையார்மாட்டேயாயின் இனிதாம்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று எண்ணுவதால் இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலினும் உண்டாவதொரு துன்பம் இருக்கின்றது.
Translation:
A lovers' quarrel brings its pain, when mind afraid
Asks doubtful, 'Will reunion sweet be long delayed?'.
Explanation:
The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike.

குறள் 1308:
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்?.
மு.வரதராசனார் உரை:
நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?.
சாலமன் பாப்பையா உரை:
இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும் அன்பரைப் பெறாதபோது, ஒருவர் வருந்துவதால் என்ன பயன்?.
பரிமேலழகர் உரை:
(உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தலைமகளொடு புலந்து சொல்லியது.) நொந்தார் என்று அஃது அறியும் காதலர் இல்லாவழி - இவர் நம்பொருட்டாக நொந்தார் என்று அந்நோவினை அறியும் அன்புடையாரைப் பெறாவழி; நோதல் மற்று எவன் - ஒருவர் நோகின்றதனாற் பயன் என்? ('அறிதல்' - ஈண்டு ஊடலை இனிது உணர்தல். 'மற்று' - வினை மாற்றின்கண் வந்தது. இவள் நம் காதலியல்லள்; அன்மையின், இந்நோவு அறியாள்; அறியாமையின், நாம் புலக்கின்றதனால் பயனில்லை எனத் தன் ஆற்றாமை உணர்த்தியவாறு.).
மணக்குடவர் உரை:
யான் நோகின்றதனால் பயனென்னை? இவர் நொந்தாரென்று நினைத்து அதனை யறிந்து தீர்க்கும் காதலர் மனமிலாராகியவிடத்து. இஃது உணர்ப்புவயின் வாரா வூடற்கண் தலைமகன் புலந்துழி. அதனையறிந்து அகம்புக்க தோழி அவனுக்குச் சொல்லியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
நம்பொருட்டு வேதனையுற்றார் என்று அந்த வேதனையினை அறியும் அன்பில்லாத காதலரைப் பெறாதபோது, ஒருவர் நொந்து கொள்ளுவதால் பயன் என்ன?.
Translation:
What good can grieving do, when none who love
Are there to know the grief thy soul endures?.
Explanation:
What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?.

குறள் 1309:
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்.
மு.வரதராசனார் உரை:
நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.
சாலமன் பாப்பையா உரை:
நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) நீரும் நிழலதே இனிது - உயிர்க்கு இன்றியமையாத நீரும் நிழலின் கண்ணதே இனிதாவது, ஏனை வெயிலின் கண்ணது ஆகாது; புலவியும் வீழுநர்கண்ணே இனிது - அது போலக் கலவிக்கு இன்றியமையாத புலவியும் அன்புடையார்கண்ணே இனிதாவது, ஏனை அன்பிலார்கண் ஆகாது. (நிழற்கண் இருந்த நீர் குளிர்ச்சிமிக்குத் தாகம் தணித்தலின், இனிதாயிற்று. வீழுநர் - ஆற்றாமைக்கு நோதலும் கூடுதற்கண் வேட்கையும் உடையராவார். 'இவள் நம்மாட்டு அவ்விரண்டும் இன்மையின் இப்புலவி தானும் இன்னாதாகா நின்றது', என்பதாம்.).
மணக்குடவர் உரை:
ஊடல் செய்யின் இன்பம் உண்டாயினும், அதன் கண்ணும் ஒரு துன்பம் உண்டு: புணருங்கால் அது நீட்டிக்குங்கொல்லோ? நீட்டியாதோ? என்று ஐயுறுதலால். இது தலைமகள் ஆற்றாமை வாயிலாகப் புலக்கத் தலைமகன் அது கண்டு சொல்லியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
உயிர்க்கு இன்றியமையாத நீரும் நிழலினிடத்தே இனிதாகும். வெயிலில் இனிதாகாது. அதுபோலப் புணர்ச்சிக்கு இன்றியமையாத புலவியும் அன்புடையவரிடத்தில்தான் இனிதாகும்.
Translation:
Water is pleasant in the cooling shade;
So coolness for a time with those we love.
Explanation:
Like water in the shade, dislike is delicious only in those who love.

குறள் 1310:
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம்.
மு.வரதராசனார் உரை:
ஊடல் கொண்ட‌போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.
சாலமன் பாப்பையா உரை:
ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் முயல்வதற்குக் காரணம் ஆசையே.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) ஊடல் உணங்க - தான் ஊடற்கண்ணே மெலியாநிற்கவும்; விடுவாரொடு கூடுவேம் என்பது என் நெஞ்சம் அவா - விட்டிருக்க வல்லாரோடு கூடக்கடவேம் என்று என் நெஞ்சம் முயறற்கு ஏது தன் அவாவே; பிறிது இல்லை. (அன்பும் அருளும் இல்லாதவரை உடையர் என்றும் அவரோடு யாம் கூடுவம் என்றும் கருதி அதற்கு முயறல் அவாவுற்றார் செயலாகலின், 'கூடுவேம் என்பது அவா' என்றான். காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. 'இக்கூட்டம் முடியாது' என்பதாம்.).
மணக்குடவர் உரை:
என் புலவியைச் சாகவிட்டிருக்க வல்லாரோடு என்னெஞ்சு, கூடுவேமென்று நினைக்கின்றது தன்னாசைப்பாட்டால். இத புலவி நீங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் புலவி தீர்வாளாய்ச் சொல்லியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தான் ஊடலினால் மெலிந்து நிற்கவும் விட்டிருக்க வல்லவரான காதலருடன் கூடக்கடவோம் என்று எனது நெஞ்சம் முயலுதற்குக் காரணம் தனது ஆசையேயாகும்.
Translation:
Of her who leaves me thus in variance languishing,
To think within my heart with love is fond desire.
Explanation:
It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike.