நீங்கள் இருக்கும் பகுதி:
முகப்பு >
குறள் 1211-1220
> காமத்துப்பால் - கற்பியல் - கனவுநிலையுரைத்தல்
குறள் 1211: காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.
கலைஞர் உரை: வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?.
மு.வ உரை:
( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?.
சாலமன் பாப்பையா உரை:
என் மன வேதனையை அறிந்து அதைப் போக்க, என்னவர் அனுப்பிய தூதை என்னிடம் கொண்டு வந்த கனவிற்கு நான் எதை விருந்தாகப் படைப்பேன்?.
Translation: It came and brought to me, that nightly vision rare,
A message from my love,- what feast shall I prepare?.
Explanation: Where with shall I feast the dream which has brought me my dear one's messenger ?.
குறள் 1212: கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.
கலைஞர் உரை: நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்.
மு.வ உரை:
கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும் தன்மையைச் சொல்வேன்.
சாலமன் பாப்பையா உரை:
கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும் தன்மையைச் சொல்வேன்.
Translation: If my dark, carp-like eye will close in sleep, as I implore,
The tale of my long-suffering life I'll tell my loved one o'er.
Explanation: If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lord.
குறள் 1213: நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.
கலைஞர் உரை: நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.
மு.வ உரை:
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.
சாலமன் பாப்பையா உரை:
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.
Translation: Him, who in waking hour no kindness shows,
In dreams I see; and so my lifetime goes!.
Explanation: My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours.
குறள் 1214: கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.
கலைஞர் உரை: நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது.
மு.வ உரை:
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.
சாலமன் பாப்பையா உரை:
நேரில் வந்து அன்பு செய்யாதவரை அவர் இருக்கும் இடம் போய் அவரைத் தேடிக்கொண்டு வந்து தருவதால் கனவில் எனக்கு இன்பம் உண்டாகிறது.
Translation: Some pleasure I enjoy when him who loves not me
In waking hours, the vision searches out and makes me see.
Explanation: There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness.
குறள் 1215: நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.
கலைஞர் உரை: காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!.
மு.வ உரை:
முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு அவரை நேரில் கண்டு அனுபவித்ததும் சரி, இப்போது கனவில் அவரைக் கண்டு அனுபவிப்பதும் இரண்டுமே எனக்கு இன்பந்தான்.
Translation: As what I then beheld in waking hour was sweet,
So pleasant dreams in hour of sleep my spirit greet.
Explanation: I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant.
குறள் 1216: நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.
கலைஞர் உரை: நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே.
மு.வ உரை:
நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.
சாலமன் பாப்பையா உரை:
கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார்.
Translation: And if there were no waking hour, my love
In dreams would never from my side remove.
Explanation: Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me.
குறள் 1217: நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.
கலைஞர் உரை: நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?.
மு.வ உரை:
நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?.
சாலமன் பாப்பையா உரை:
நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?.
Translation: The cruel one, in waking hour, who all ungracious seems,
Why should he thus torment my soul in nightly dreams?.
Explanation: The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?.
குறள் 1218: துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
கலைஞர் உரை: தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்.
மு.வ உரை:
தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்.
சாலமன் பாப்பையா உரை:
என் நெஞ்சில் எப்போதும் வாழும் என்னவர் நான் உறங்கும் போது என் தோளின் மேல் கிடக்கிறார். விழித்துக் கொள்ளும் போதோ வேகமாக என் நெஞ்சிற்குள் நுழைந்து கொள்கிறார்.
Translation: And when I sleep he holds my form embraced;
And when I wake to fill my heart makes haste!.
Explanation: When I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soul.
குறள் 1219: நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.
கலைஞர் உரை: கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்.
மு.வ உரை:
கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத காதலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.
சாலமன் பாப்பையா உரை:
இன்னும் திருமணம் ஆகாத, ஆகிக் கணவனைப் பிரிந்து அறியாத இந்தப் பெண்கள், கனவில் காதலனைக் கண்டு அறியாதவர், ஆதலால், அவர்கள் அறிய நேரில் வந்து என்னிடம் அன்பு காட்டாத என்னவரை அன்பற்றவர் என்று ஏசுகின்றனர்.
Translation: In dreams who ne'er their lover's form perceive,
For those in waking hours who show no love will grieve.
Explanation: They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours.
குறள் 1220: நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.
கலைஞர் உரை: என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?.
மு.வ உரை:
நனவில் நம்மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ?.
சாலமன் பாப்பையா உரை:
என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டார் என்று என்னவரை ஏசும் இவ்வூர்ப் பெண்கள், அவர் நாளும் என் கனவில் வருவதைக் கண்டு அறியாரோ?.
Translation: They say, that he in waking hours has left me lone;
In dreams they surely see him not,- these people of the town.
Explanation: The women of this place say he has forsaken me in my wakefulness. I think they have not seen him visit me in my dreams.